அருள் மிகுபிரம்மபுரீஸ்வரர் ஆலைய தலவரலாறும் சிறப்பும், தலையெழுத்தை மங்களகரமாக மாற்றி அமைக்கும் சக்தி படைத்தவர் பிரும்மா. ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னை வரும் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பட்டூர் என அழைக்கப்படும் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ப்ரம்ம சம்பத் கௌரீ சமேத ஸ்ரீ ப்ரம்மபுரீஸ்வரர் ஆலையத்தில் குடிகொண்டுள்ள ப்ரம்மா தலையெழுத்தை மங்களகரமாக மாற்றும் சக்தி படைத்தவர் என்பது ஐதீகம்.
19/10/2010 அன்று ஸ்ரீரங்கத்திலிருந்து அந்தக் கோயிலுக்கு எங்கள் குடும்பம் சென்ற போது அந்த ஊரில் அந்தக் கோயிலின் எதிரே கொடி ஏற்றிக்கொண்டிருந்தனர், கோயிலின் திருவிழாவை ஒட்டி கொடிமரம் ஏற்றுதல் மரபு, கொடி மரம் ஏற்றிவிட்டு அதன் பிறகுதான் திருவிழாவைத் தொடங்குவார்கள். அப்படி கொடியேற்றும் நாளில் ஊரில் உள்ள அனைத்து மக்களும் அந்த கொடியேற்றத்தில் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைப்பர்,அது மட்டுமல்ல அப்படிக் கொடியேற்றிய நாளில் ஊரில் உள்ளவர்கள் அந்த திருவிழா முடிவடையும் நாட்கள் வரை அந்த ஊரின் எல்லையைத் தாண்டக் கூடாது என்று கூறுவர்.
பொதுவாக ப்ரம்மனுக்கு கோயில் கிடையாது என்று கூறுவர். ஆனால் இந்த ஊரில் கோயில் கொண்டுள்ளார் ப்ரம்மன். மிக அழகான சக்தி வாய்ந்த ப்ரம்மன் தரிசனம் செய்தோம். அந்தக் கோயிலுக்கு நாங்கள் சென்ற நேரத்தில் கர்பக் கிருஹத்தின் எதிரே இருந்த பெரிய நந்தியின் பக்கத்திலே உற்சவ மூர்த்திகளை வைத்து நந்திதேவருக்கும் ,உற்சவ மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது காணக் கிடைக்காத அரிய காட்சி, அது மட்டுமல்ல அந்த நந்திதேவர் நான்கு தூண்களின் நடுவே இருக்கிறார்,அந்த நன்கு தூண்களிலும் நான்கு விதமான நரசிம்மர் புடைப்புச் சிற்பம் இருக்கிறது.
ஆதி காலத்திலிருந்தே சைவமும் வைணவமும் ஒன்றை ஒன்று தழுவியே வளர்ந்திருக்கிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்தக் கோயில்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it